லண்டன்: மாம்பழ இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய யூனியனை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகிறது.
இந்தியாவின் புகழ்பெற்ற மாம்பழங்களான அல்போன்சா போன்ற மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு கடந்த மாதம் ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. இந்த தடை 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என அறிவித்தது.
இதன் காரணமாக ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 28 நாடுகளுக்கு மாம்பழ ஏற்றுமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இறக்குமதியான இந்திய மாம்பழங்களில் 6 சதவிகிதம் வரை பழவண்டு மற்றும் பூச்சித் தாக்குதல் இருந்ததாக ஐரோப்பிய யூனியன் சுகாதார மையம் அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டது.
மாம்பழ சீசன் தொடங்கும் நேரத்தில் இறக்குமதியாளர்களிடம் ஆலோசிக்காமல் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏற்றுமதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வங்கதேசம், சவுதி அரேபியா, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா ஆகியவை இந்திய மாம்பழங்களை அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன. உலக மாம்பழ உற்பத்தியில் இந்தியா 40 சதவிகித பங்குடன் முதலிடத்தில் இருக்கிறது.
இந்திய வர்த்தகதுறை அமைச்சகம் சார்பில் தடைக்கான விளக்கம் மற்றும் தடையை நீக்க உத்தரவிட கோரியும் கடிதம் எழுதப்பட்டும் எந்த பலனும் இல்லை.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியனை சேர்ந்த உயர் அதிகாரம் கொண்ட விஞ்ஞானிகள் குழு வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகிறது. மாம்பழ இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஆய்வு செய்து தடை நீக்க வழிவகை செய்வதற்காக வருகை தருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, புருசல்ஸ் கூட்டத்திலும் இதுகுறித்து இந்திய அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
கடந்த 1989ஆம் ஆண்டு அமெரிக்காவும் இது போன்ற தடையை விதித்து பின்னர் 2007ஆம் ஆண்டு தடையை நீக்கியது குறிப்பிடத்தக்கது.
:
: