வாழைச்சேனை மயிலங்கரச்சை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஆசிரியரால் தாக்கப்பட்டமை சார்பாக விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அனுப்பி வைத்துள்ள மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது!
கல்குடா கல்வி வலயதுக்குட்பட்ட வாழைச்சேனை மயிலங்கரச்சை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் செல்வராஜா வரதன் (வயது 09) என்னும் 4ம் ஆண்டு கல்வி கற்பவன். கடந்த 2014.09.23ம் திகதி அன்று பாடசாலையில் வைத்து அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஜனாப்.என்.எம்.நசீர் என்பவரால் தாக்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவன் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதி சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அறிகின்றேன்.
இத்தாக்குதலை மேற்கொண்ட ஆசிரியர் சார்பாக நியாயமான நடவடிக்கைகள் நடைபெற்றதாக தகவல் கிடைக்கவில்லை. எனவே உரிய முறையில் விசாரணையை மேற்கொண்டு இச் சிறுவனுக்கு துன்பம் விளைவித்த இவ்ஆசிரியர் மேல் சட்ட நடவடிக்கை எடுக்க முன்வருமாறு வேண்டுகின்றேன். தங்கள் நடவடிக்கை சார்பாக பதிலை எதிர்பார்க்கின்றேன் என இவ் மகஜரில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பிரதிகள் வாழைச்சேனை கல்குடா வலய வலயக் கல்விப் பணிப்பாளர், வாழைச்சேனை பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரி, வாழைச்சேனை பொலிஸ் நிலையம் பொலிஸ் பொறுப்பதிகாரி, மட்டக்களப்பு மாவட்ட டி.ஐ.ஜி, வாழைச்சேனை ஏ.எஸ்.பி. ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.