முல்லைதீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் மனைவி மற்றும் கணவனென இருவர் படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை கொள்ளையில் ஈடுபட்டுவிட்டு தப்பிச்செல்ல முற்பட்ட முல்லைதீவு காவல்நிலையத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரியொருவர் உள்ளிட்ட நால்வர் வவுனியா சோதனை சாவடியில் வைத்து கைதாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்... தம்பி என்றழைக்கப்படும் இ.சந்திரரூபன்(வயது 37) முல்லைதீவிலுள்ள பிரபல கட்டட ஒப்பந்தகாரர் ஆவார். தனது ஒப்பந்த வேலைக்கென வங்கியில் எடுத்து வந்திருந்த 20 இலட்சம் பணத்தை வீட்டில் வைத்திருந்துள்ளார். வீட்டில் அவரது பணியாளர்களான நால்வரும் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை நால்வர் கொண்ட கொள்ளைக்கும்பலொன்று பணியாளர்களைத் தாக்கி கைகால்களினை கட்டிப்போட்டுவிட்டு வீட்டை உடைத்து கொள்ளையிட முற்பட்டுள்ளது. அதனை தடுக்க முற்பட்ட அவரது மனைவியையும் அவரையும் வாள்களால் வெட்டி படுகாயமாக்கிவிட்டு அங்கிருந்த 20 இலட்சம் பணம் மற்றும் 13 பவுண் நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளது. எனினும் கொள்ளையர்களுள் ஒருவரை முல்லைதீவு காவல்நிலையத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரியென அவர் அடையாளம் கண்டுகொண்டுள்ளார். அவர் வழங்கிய தகவலையடுத்து மோப்பநாய் சகிதம் நடத்தப்பட்ட தேடுதலில் குறித்த காவல்துறை அதிகாரியினை தேடி நாயும் காவல்நிலையம் சென்றுள்ளது. இந்நிலையில் குறித்த காவல்துறை அதிகாரி தெற்கிற்கு தப்பியோட முற்பட்டிருந்த நிலையில் வவுனியாவில் வைத்து கைதாகியுள்ளார். எனினும் அவருடன் கைதான எஞ்சிய மூவரும் காவல்துறையினை சேர்ந்தவர்களா இல்லையா என்பதை அறியமுடியவில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>