மியான்மரில் சட்டவிரோதமாக மரம் வெட்டிய வழக்கில் சீனாவைச் சேர்ந்த
153 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.மியான்மரில் உள்ளது கச்சின் மாநிலம். சீன எல்லைப்பகுதியை ஒட்டிய இந்த மாநிலத்தில் சீனாவைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக மரம் வெட்டி கடத்துவதாக கூறப்படுகிறது. இதனைத் தடுக்க அந்நாட்டு ராணுவத்தினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக கடந்த ஜனவரி மாதத்தில் சோதனை நடத்தியபோது சீனாவைச் சேர்ந்த 153 பேர் மரக்கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு மியான்மர் நீதிமன்றத்தில் கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்ததது. இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த தீர்ப்பில், சட்டவிரோதமாக மியான்மர் எல்லைக்குள் நுழைந்து மரம் வெட்டிய குற்றத்திற்காக 153 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் சிறுவன் என்பதால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாக 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.